Friday, 11 January 2013

பாட்டியிடம் கதை கேளு



பாட்டியிடம் கதை கேளு              காக்காம்மா குருவியம்மா கதை

              ஒரு ஊரில் காக்காவும் குருவியும் நண்பர்கள்.  காக்கா கொஞ்சம் அதிகமாக செலவு செய்யும் ஊதாரி. குருவி சேமிக்கும் போதெல்லாம் காக்கா கிண்டல் செய்வது வழக்கம். சம்பாதித்து செலவு செய்து சந்தோஷமா இருக்க வேண்டும் என்பது காக்காவின் வாதம். அதனால் காக்காவிடம் சேமிக்கும் பழக்கம் இல்லை. குருவி கொஞ்சம் சிக்கனவாதி. குருவி கொஞ்சமாக சம்பாதித்தாலும் சேமிக்கும் பழக்கம் உடையவள். எதிர்காலத்தைப் பற்றி சிந்தனை உடையவள். தன்னிடம் உள்ள சேமிப்பை வைத்து குருவி தன் வீட்டை கல்வீடாக கட்டிக்கொண்டாள். காக்கா சேமிக்கும் பழக்கம் இல்லை என்பதால் மண் வீடுதான் கட்ட முடிந்தது.
             ஒருநாள் இருவரும் சந்தைக்கு சென்று தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களையும் பொரி கடைலையும் வாங்கிக் கொண்டு இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். வரும் போதே பொரி கடலை பற்றியே நினைத்துக் கொண்டு வந்தது காக்கா. வீட்டுக்கு வந்தவுடன் பொரிகடலையை சாப்பிட ஆரம்பித்தது. குருவி சிறிது சிறிதாக சாப்பிட்டு மழைக்காலத்தில் தேவைப்படும் என்று சிறிது சேர்த்து வைத்தது. சில தினங்கள் கழித்து, ஒரு நாள்  மாலையில் திடீரென காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. மண் வீடென்பதால்  காக்காவின் வீடெல்லாம் கரைந்து விட்டது.   உடனே காக்காவும் தன் குஞ்சுகளும் மழையில் நனைந்து குளிரில் நடுங்கியது. காக்காவால் தன் குழந்தைகளுக்கு உணவு கூட சமைக்க முடியவில்லை. விறகு அடுப்பெல்லாம்  நனைந்திருந்தது. வீடு கரைந்திருந்து. கல் வீடு என்பதால் குருவியின் வீடு மட்டும் நன்றாக இருந்தது.
             காக்கா தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குருவியின் வீட்டுக்கு சென்றது. ஒரு இரவு தங்குவதற்கு இடமும் கொஞ்சம் உணவும் கேட்டது. உடனே குருவி, தன் கணவன் வந்தால் திட்டுவார் “அப்படியே சென்று இப்படியே வா” என்று கூறியது. சிறிது நேரம் கழித்து காக்கா மீண்டும் சென்றது. அப்போது குருவி  இப்போதுதான் அடுப்பு பற்றவைதிருக்கிறேன் “அப்படியே சென்று இப்படியே வா” என்றது. சிறிது நேரம் கழித்து சென்றது காக்கா, தன் குழந்தைகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் “அப்படியே சென்று இப்படியே வா” என்று கூறியது குருவி. இன்னும் சிறிது நேரம் கழித்து சென்றது காக்கா. தற்போதுதான் தன் குழந்தைகளும் கணவனும் தூங்க சென்றிருகிறார்கள்  “அப்படியே சென்று இப்படியே வா” என்று காக்காவை அலையவிட்டது குருவி.
           இன்னும் சிறிது நேரம் கழித்து சென்றது காக்கா. தற்போது போனால் போகட்டும் என்று மீதமிருந்து உணவை காக்காவின் குழந்தைகளுக்கு கொடுத்து கதவோரம் படுத்துக்கொள்ளுமாறு கூறியது குருவி. கதவோரம் படுத்துக்கொண்டால் குளிரும் அதனால்  வேறு இடத்தை தருமாறு கேட்டது காக்கா. அடுப்பருகில் படுத்துக்கொள்ளுமாறு சொன்னது குருவி. அங்கு மிகவும் சூடாக இருக்கும் என்று தவிர்த்து காக்கா. அதன் மனதில் ஒரு திட்டம் ஓடிக்கொண்டிருந்தது. சந்தையில் வாங்கிய பொரிகடலையை எப்படியாவது சாப்பிட வேண்டும் என்பதுதான் அது.  அப்போது குருவி பானையின் சந்தில் படுத்துக்கொள்ளுமாறு கூறியது. பானை தன்மேல் விழுந்து விடும் என்று கூறியது காக்கா. இப்படியே குருவி ஒவ்வொரு இடமாக சொல்ல எல்லாவற்றையும் தவிர்த்த காக்கா கடையில் பொரிகடலை இருக்கும் பானையில் இடம் பிடித்தது.
           சிறிது நேரத்தில் அனைவரும் தூங்கிவிட்டனர். தற்போது காக்கா பொரிகடைலையை சாப்பிட திட்டம் தீட்டியது. ஒவ்வொரு கடலையாக கொத்தி கொத்தி சாப்பிட ஆரம்பித்தது. உடனே சத்தம் கேட்டு எழுந்தது குருவி. என்ன சத்தம் என காக்காவிடம் கேட்டது. உடனே காக்கா மதியம் சந்தையில் வாங்கிய பாக்கை மெல்கிறேன் என்று கூறி தப்பியது. இன்னும் சிறிது நேரம் கழிந்தது.. மீண்டும் டொக்..டொக் சத்தம். என்ன என்று கேட்டது குருவி. ஒன்றுமில்லை. புது இடம் சரியாக தூக்கம் இல்லாததால் பானையில் உரசும் சத்தம் என்று கூறி தப்பித்தது. இரவு முழுதும் சத்தம் தொடர்ந்தது. காலையில் எழுந்து காக்கா படுத்திருந்த பானையை பார்த்தது குருவி.. பானையில் இருந்த அனைத்து பொரி கடலையையும் தின்று முடித்து பானையை முழுவதிலும் “ஆய்” போயிருந்தது காக்கா. உடனே குருவி சத்தம் போட்டது. காக்கா பானையில் இருந்து எழுந்து பறந்தோட குருவி துரத்திக் கொண்டே போனது. ஆனால் காக்கா வேகமாகப் பறந்து தப்பித்து விட்டது.
                                                                                                
அங்கு ஒரு நிலத்தில் பத்து பேர் ஏர் ஓட்டிக்கொண்;டிருந்தனர்.
குருவி அவர்களைப் பார்த்து கேட்டது.
முதலேர்ககாரரே! முதலேர்காரரரே!! இந்த வழியா காக்கா ஒன்று போனதா?
குருவியம்மா! குருவியம்மா!! நான் பார்க்கல இரண்டாவது ஏர்க்காரரைக் கேளு என்றார். முதல் ஏர்க்காரர்.
இரண்டாவது ஏர்க்காரரே! இரண்டாவது ஏர்க்காரரே!! இந்த வழியா காக்கா ஒன்று போனதா?
குருவியம்மா!  குருவியம்மா!! நான் பார்க்கல, மூன்றாவது ஏர்க்காரரைக் கேளு என்றார். இரண்டாமவர்.
இதே போல அனைவரிடமும் கேட்க அனைவரும் அடுத்தவரைக் கை காட்டினர்.
கடைசி ஏர்க்காரரே! கடைசி ஏர்க்காரரே!! இந்த வழியா காக்கா ஒன்று போனத பார்த்தீங்களா? என்றது.
கடைசி ஏர்க்காரர் சொன்னார். ஆமாம் பார்த்தேன். காக்கா பறந்து வந்து இந்த மரத்தில் உட்கார்ந்தது. நான் கல்லெடுத்து போட்டேன். காக்கா பறந்து விட்டது என்றார். குருவி தன் கதையை அவர்களிடம் சொல்லி அழுதது. குருவியின் கதையை கேட்ட அனைத்து ஏர்காரர்களும் சேர்ந்து காக்கவை பிடித்து சுண்ணாம்பு பானையில் போட்டு கொதிக்க வைத்தனர்.

நீதி : ஊதாரியாய் இருக்க கூடாது. ஊதாரிகளுடன் சேரக்கூடாது.
பயன்:  குருவியானது அப்படியே போய் இப்படியே வா என்று சொல்வதும், ஏர்க்காரர்களைப் பார்த்து பாடும் பாட்டில் முதலேர்க்காரரே முதலேர்க்காரரே என்று ஆரம்பித்து பத்தாவது ஏர்க்காரரே என்று முடிக்கும் போதும் அதில் உள்ள தாளமும் இசையும் குழந்தைகளை கண்டிப்பாக தூங்கவைக்கும்.

No comments:

Post a Comment