கட்சிக்கொடிகம்பங்கள் இல்லை, ரசிகர் மன்ற
பேனர்கள் இல்லை, சுவற்றில் அரசியல் விளம்பரங்கள் இல்லை. புதிதாக நமது ஊருக்கு வருபவர்க்கு சற்று
ஆச்சர்யமாககூட இருக்கும். ஆனால் உண்மை
இதுதான். எந்த காலகட்டத்திலும் நமது ஊர்
எந்த அரசியல் கட்சிகளுக்காகவும், சினிமா நடிகர்களுக்காவும் சண்டயிட்டுக்கொண்டது
கிடையாது. தேர்தல்களின்போது ஊர்மக்கள்
ஒன்றுகூடி பேசி அன்றைய சூழ்நிலைக்கேற்ப ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிப்பதென
முடிவெடுப்பர். இதன்படி பெரும்பாலான
மக்கள் வாக்களிப்பர். ஆனால் இது கட்டாயம் கிடையாது தனிப்பட்ட நபர்களின்
விருப்பத்திற்கேற்ப அவரவர் விரும்புபவர்களுக்கு அவரவர் வாக்களிக்கலாம். எந்த
கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தாலும் அந்த கட்சியின் அடையாளங்களை ஊரில் ஏற்படுத்த
நமது ஊர் மக்கள் அனுமதித்ததே கிடையாது.
இனியும் இது தொடரும் என்றே நம்புவோம்.
இந்நிலையில் நமது ஊர் வேட்பாளர்கள்
உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்ட நிகழ்வுகளை இனி காண்போம். முதன் முதலில் சுமார்
நாற்பது வருடங்களுக்கு முன் ஊர் மக்கள் ஒன்று கூடி திரு சீனிவாச செட்டியார்
அவர்களை ஊராட்சி மன்ற துணை தலைவராக போட்டியிட வைக்கின்றனர். அவரை எதிர்த்து அப்போது யாரும் போட்டியிடாததால்
அவர் வெற்றி பெற்றார்.
1997ம் ஆண்டு உள்ளாட்சி
தேர்தலில் உங்கரான ஹள்ளி ஊராட்சி தலைவர் பதவி பெண்கள் தொகுதியாக
அறிவிக்கப்பட்டது. திரு செல்வம் அவர்களின்
சார்பில் அவரது சகோதரி திருமதி. கீதா ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு
போட்டியிட்டார். அவருக்கு கைஉருளை சின்னம்
ஒதுக்கப்பட்டது. முதன் முதலில் ஊர்மக்களே
திரண்டு ஓட்டு சேகரித்து அந்த தேர்தலில்தான்.
தேர்தல் முடிந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டபின்
ஏமாற்றமே மிஞ்சியது நமக்கு. உத்தனூரை
சேர்ந்த திருமதி. சந்திரா (லாரி சின்னம்) வெற்றி பெற்றார். கீதாவிற்கு
மூன்றாமிடமே கிடைத்தது.
2002ம் ஆண்டு ஊர்கவுண்டர் துரை சார்பில் திருமதி.
விமலா துரை ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பல்பு சின்னத்தில்
நின்ற அவர் ஊர் மக்களின் ஏகோபித்த ஆதரவு மற்றும் பிரச்சாரத்தின்
காரணமாக திருமதி. இந்திராணியை சுமார் 200 ஓட்டுகள்
வித்தியாசத்தில் தோற்க்கடித்து ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார். அவ்வெற்றியின் மூலமாக நமது ஊருக்கு சிமென்ட்
சாலை, சிறிய தண்ணீர் டேங்க், ஏரியிலிருந்து புதிய குடிநீர் கிணறு, கால்நடை கொட்டகை, மகளிர் கழிவறை, மகளிர் சுயஉதவி குழு கட்டிடம்,
தானியம் அடிக்க களம் என பல்வேறு நலத்திட்டங்களை நமது ஊரிற்கு செய்தார் திருமதி.
விமலா துரை. நமது ஊரிற்கு மட்டுமல்லாது
நமது பஞ்சாயத்துக்கு உட்பட்ட அணைத்து கிராமங்களுக்கும் பல நல்ல திட்டங்களை
செய்தார்.
பதவிக்காலம் முடிந்து அடுத்த தேர்தலில் 2007ம்
ஆண்டு ஊர்மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் போட்டியிட்டார் திரு. துரை. அவருக்கு லாரி
சின்னம்
ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை மற்ற ஊரினரின்
ஆதரவில்லதனால் அவர் குளியனூரை சேர்ந்த ஜெயராமனிடம் தோல்வியை தழுவினார்.
அடுத்த தேர்தல் 2012ம் ஆண்டு
நடந்தது. இம்முறை திரு. சீனிவாசன் த/பெ
துரைசாமி போட்டியிட்டார். அவருக்கு கத்திரிக்கோல் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இம்முறையும் ஊர்மக்கள் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டனர். ஆனால் ஜாதி வாரியான ஓட்டுகள் மற்றும் நமது ஊர்
நமது பஞ்சாயத்தில் புவியியல் ரீதியாக ஓரமாக
இருப்பது போன்ற காரணங்களால் நமது வேட்பாளர் தோல்வியை தழுவினார். அவரை தோற்கடித்தவர் ரங்கநாதன்
ஆவார்.
நடந்த கதை
ஒரு ஊரில் இரண்டு பங்காளிகளுக்கு வரப்புத் தகராறு
வந்தது. ஊர் பஞ்சாயத்திற்கு வராமலேயே
பிரச்னை கோர்டிற்கு சென்றது. அந்த
காலத்தில் கோர்ட் திருப்பத்தூரில் இருந்தது.
போக்குவரத்து வசதியும் கிடையாது.
வழக்கு விசாரணைக்காக இரு தரப்பினரும் போலீஸ் பாதுகாப்புடன்
தருமபுரியிலிருந்து திருப்பதூரிற்கு நடந்தே செல்வது வழக்கம். இப்படி செல்கையில் இருவருக்கும் பிரச்னை
ஏற்படாமல் இருக்க இருபிரிவினரும் சாலையின் இரு பக்கங்களில் செல்வது வழக்கம். நடந்தே செல்வதால் இரவிலும் பயணிக்க
வேண்டியிருந்தது.
வழக்கு விசாரணை வாய்தா என்று தொடர்ந்ததால் சாட்சிகள்
மெதுவாக குறைந்தனர். சில மாதங்களுக்கு
பிறகு உடன் வரும் காவலர்களும் குறைந்து ஒரு கட்டத்தில் காவலர்கள் இல்லாமல் இரு
பங்காளிகளும் தனித்தனியாக விசாரணைக்கு சென்றனர்.
இப்படி செல்கையில் முதலில் இருவரும் பேசிக்கொள்ளாமலேயே செல்வார்கள். பிறகு திருடர்கள் பயம் காரணமாக இருவரம் ஒரே
இடத்தில் தங்கி ஒரே இடத்தில சாப்பிட்டு ஒன்றாகவே பயணித்தனர்.
தனியாக பேசாமலேயே சென்ற இருவரும் சில நாட்களுக்கு பிறகு
மெதுவாக பேசத்துவங்கினர். அதன் பின் ஒருவர் உணவை மற்றொருவர் சாப்பிடுவதும், ஒருவர்
சுமையை மற்றவர் சுமப்பதும் வாடிக்கையானது.
அடுத்தடுத்த விசாரணைகளிலும் வழக்கு முடியவில்லை. இருவரும் ஒன்றாக சென்று ஒன்றாகவே திரும்பியதால்
இருவருக்கும் இணக்கம் அதிகமானதன் காரணமாக முடிவில் இருவரும் பிரச்சனைகளை மறந்து
சமாதானமானார்கள்.
அந்த ஊர் : உங்கரான அள்ளி
சொன்னவர்:
பாண்டியன் (கொண்டி செட்டி)
அந்த
பங்காளிகள்: விவரம் தெரியவில்லை
டயலாக்
சின்ன ராஜ் மனைவி கண்ணு
கிழவி(கண்ணம்மா) தனது கணவரிடம் சண்டை வந்து அடிவாங்கியபின் மற்றவர்களிடம் சொல்லும்
டயலாக்.
கணவரிடம் அடி வாங்கிய எனக்கே இவ்வளவு
வலிக்கிறதே, என்னை அடித்த என் கணவரின் கை எவ்வளவு வலிக்கும் என்பார்.
(இது தம்பதியினரின் விட்டுக்கொடுத்து
வாழும் மனப்பக்குவத்தையும், அந்நியோன்யத்தையும் காட்டுகிறது.)
நம்ம ஊரு ஸ்பெஷல்
பேல பிண்டி உண்ட (சத்து உருண்டை)
ஹார்லிக்ஸ் பூஸ்ட்
காம்ப்ளான் என ஊட்டச்சத்து பானங்களை பருகும் நாம் ஒரு அதிக செலவில்லாத அனைவரும்
உண்ணக்கூடிய ஆரோக்கியமான ஒரு உணவுப்பொருள் செய்வது எப்படி என்று பார்ப்போம். அந்தகாலத்தில் கிராமப்புறங்களில் குறிப்பாக
நமது ஊரில் வீட்டில் செய்யும் ஒரு நல்ல snancks இதுவாகும். அதுவும் குழைந்தைகள் மற்றும் கர்பினிகளுக்கு
மிகவும் பயனுள்ளதாகவும் அனைத்து சத்துகளும் கிடைக்கக்கூடியதாகவும் உள்ள
உணவுப்பொருள் ஆகும்.
தேவையான பொருட்கள்:
சோளம் - ¼ கிலோ
பச்சை பயிறு - 100 கிராம்
புழுங்கல் அரிசி - ¼ கிலோ
கொள்ளு - 100 கிராம்
கொண்டை கடலை- 100 கிராம்
பொட்டு கடலை - 100 கிராம்
வேர்கடலை - ¼ கிலோ
வெல்லம் - 1 கிலோ
செய்முறை:
சோளத்தை ஒரு மண் பாத்திரத்தில் இட்டு
சூடு செய்து பொரி செய்துகொள்ளவும்.
வேர்கடலையை வருத்த பின் பொட்டு நீக்கி பாதி பருப்பாக
உடைத்துக்கொள்ளவும். பொட்டுக்கடலையை
ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும். மற்ற அனைத்து தானியங்களையும் தனித்தனியாக வறுத்து
பொட்டு நீக்கியபின் உரலிலோ மிக்சியிலோ இட்டு நன்றாக சின்னரவை அளவிற்கு அரைத்துகொள்ளவும். ஒரு கிலோ வெல்லத்தை பாகாக்கி பதமாக இறக்கி
வைத்துகொள்ளவும். வெள்ளபாகு ஆறியவுடன்
அரைத்து வாய்த்த தானியங்கள், கடலை ஆகியவற்றை பாகில் கொட்டி நன்றாக பிசைந்து
தேவையான அளவில் உருண்டைகளாக பிடிக்தால் சுவையான ஆரோக்கியமான சத்து உருண்டை தயார். டப்பாவில் அடைத்துவைத்து உபயோகிக்காலாம் ஒரு
மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கும்.
டிக் டிக் டானிக்
jhjhjhjநீ
எல்லோருக்கும் நல்லவன் எனில் அவர்கள் உன்னை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நீ எல்லோருக்கும் கெட்டவன் எனில் நீ
யாரையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை..
நம்ம ஊரு ஸ்பெஷல்
புலகூராகு
வீட்டு சமையலிலும் சரி, விருந்து
நிகழ்ச்சிகளிலும் சரி நமது ஊரில் முக்கிய இடம் பிடிப்பது புலகராகு எனப்படும்
கத்திரிக்காய் பஜ்ஜி ஆகும். அப்படிப்பட்ட புலகராகு செய்யும் முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய்
துவரம்பருப்பு
தக்காளி
வெங்காயம்
வேர்கடலை
புளி
பச்சை மிளகாய்
பூண்டு
கறிவேப்பிலை
செய்முறை:
துவரம்பருப்பை
வேகவைத்து வைத்துக்கொள்ளவும். வேர்கடலையை
வறுத்து பொடி செய்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகம், பூண்டு,
பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பின் தக்காளி, கத்தரிக்காயை அதில் சேர்த்து
வதக்கவும். வதங்கியபின் புளி உப்பு
தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
வேகவைத்தபின் நன்றாக மத்தில் கடைந்து பின் வேர்கடலை பொடி சேர்த்து
பரிமாறினால் சுவையாக இருக்கும்.
-சரஸ்வதி ராமலிங்கம்
நம்மவர்கள் பெரும்பாலும்
ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாமல், ஈகோவுடன் (நீயா நானா என்று) இருக்கிறார்களே
என்று பேசிக்கொண்டிருந்த பொழுது ஒருவர் அளித்த விளக்கம்.
நமது
குலத்தொழில் எண்ணெய் வியாபாரம். ஒரு
எண்ணெய் மற்றொரு எண்ணெயுடன் எப்போதும் கலப்பதில்லை. தனித்தனியாக பிரிந்துதான் இருக்கும். ஓவொன்றும் ஒரு தனி குணத்துடன்தான்
காணப்படும். அதுபோலவே நம்மவர்களும்
ஒருவருக்கொருவர் ஒட்டாமல் தனித்தனியாக வாழ்கிறார்கள் என்று விளக்கினார்.
விளக்கியவர்
திரு. தனஞ்செயன், வீரிசெட்டிபட்டி, குடியாத்தம்.
சுற்றுலா
தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் உங்கரான அள்ளி கிராமத்தில் பிறந்து
வளர்ந்த நாம், சுற்றுலா என்ற பெயரில் அதிகபட்சமாக தமிழகம் மற்றும் ஆந்திரா,
கர்நாடகா, கேரளா என நம் நாட்டின் தென் மாநிலங்களில் உள்ள கோவில் குளங்களையும்,
சுற்றுலா தளங்களையுமே பார்பது வழக்கம்.
இந்நிலையில் திரு. நந்தகோபால், (ஆர்மி) அவர்கள் இந்தியாவின் வட எல்லையான
காஷ்மீரில் வேலை பார்ப்பதால் நமக்கும் அங்கு
சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் விமான பயணம் எப்படி இருக்கும், அங்கு அதை வாங்கவேண்டும். இதை வாங்க
வேண்டும் என்ற சின்ன சின்ன ஆசைகள், அந்த இடம் எப்படி இருக்கும், சண்டை நடக்குமா
என்ற எதிர்பார்ப்புகள் பல தாங்கியபடி சுற்றுலாவை துவங்கினோம்.
உங்கரான அள்ளி கிராமத்திலிருந்து அனைவரும் ஒன்றாக ஒரே குழுவாக இரண்டு கார்
மூலமாக ஜூலை 18 அன்று பெங்களூரு விமான நிலையம் சென்றோம். பின் பெங்களூரிலிருந்து மும்பைக்கு சென்று
அங்கிருந்து விமானம் மூலமாக ஸ்ரீ நகர் (காஷ்மீர்) சென்றோம். நாங்கள் சென்றடைய
வேண்டியது நந்தகோபால் அவர்கள் பணியாற்றும் குப்புவாரா என்ற இடம். இந்த இடம்
பாகிஸ்தான் எல்லைகோட்டிலிருந்து சில மைல் தொலைவில் இருந்தது. ஸ்ரீ நகரிலிருந்து குப்புவாரா செல்ல அரசு
போக்குவரத்து வசதி கிடையாது, அதனால் நாங்கள் கார் மூலமாக சென்றோம். ஆனால் காஷ்மீர் எனும் வார்த்தையை கேட்டாலே
நமக்கு நினைவிற்கு வருவது மதக்கலவரம், தீவிரவாதம், ராணுவம் இவைதான். இவையெல்லாம் இத்துனை நாட்களாக வெறும்
வார்த்தைகளாகவே இருந்தது. நாம்
வீட்டிலிருந்து இந்த செய்திகளை கேட்கும்போது அய்யோ பாவம் என்ற பரிதாபத்துடன் அதை
கடந்து சென்றுள்ளோம். ஆனால் நாங்கள் அங்கு சென்ற போது இவை அனைத்தையும்
கண்முன்னே எங்களுக்கு காட்டியது காஷ்மீரில் நடந்த கலவரம். அங்கு வாழும் மக்களின்
இன்னல்களை எங்களால் உணரமுடிந்தது. கலவரத்தின் காரணமாக வழியெங்கும் மரண பயத்துடனேயே
நாங்கள் ஸ்ரீ நகரிலிருந்து குப்புவாரா சென்றடைந்தோம்.
கலவரத்தின் காரணமாக ஊரடங்கு உத்திரவு
பிறப்பிக்கப்பட்டது. அதனால் மூன்று நாட்கள் திரு. நந்தகோபால் அவர்களின்
உதவியால் இராணுவ முகாமிலேயே முடங்கியிருந்தோம். பெருத்த எதிபார்ப்புடன் சென்ற
எங்களுக்கு இந்த நிகழ்வுகள் ஏமாற்றத்தையே தந்தது. குளிர் அதிகமாக இருந்ததும்,
அங்குள்ள உணவு முறையும் மேலும் எங்களை
சோதித்து. செல்வராஜூக்கு ஒரு நாள் மட்டுமே
விடுமுறை இருந்து அதனால் எப்படியாவது ஓரிரு இடங்களுக்கு சென்று பார்க்கலாம் என்று
இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள சாதனா போஸ்ட் என்ற இடத்திற்கு சென்றோம். ஆனால் நந்தகோபால் ராணுவத்தில் இருப்பதன் காரணமாக
அவர் எங்கும் செல்ல கூடாது என் அவருக்கு உத்திரவு பிறக்கப்பட்டது. அதனால் அவர் எங்களுடன் வரவில்லை. அவரை கல்கி பால் என்ற இடத்தில் ராணுவ
முகாமிலேயே விட்டுவிட்டு நாங்கள் மட்டுமே திரும்பினோம்.
நந்தகோபால் முகாமிலிருந்து மீண்டும் திரும்பியபின் 22ம்
தேதி அன்று
குல்மார்க் என்ற இடத்திற்கு சென்றோம். அங்கு குதிரை சவாரி, பூந்தோட்டம்
பார்த்தோம். பனிப்பொழிவு அதிகமாக
இருப்பதன் காரணமாக ரோப் கார் மூலமாக சுற்றிவிட்டு, புகழ்பெற்ற தால் எரியை
சுற்றிபார்த்தபின் இரவு அங்கேயே தங்கினோம். அடுத்தநாள் 23 ம் தேதி செவ்வாய்க்கிழமை
ஸ்ரீநகரில் இருந்த 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அமர்நாத்திற்கு சென்றோம். ஹெலிகாப்டர், குதிரை ஆகியவற்றின்மீது பயணித்து
குகைக்கோயில் சென்றடைந்தோம். குளிர்
அதிகமாக இருந்தால் கையுறை, காலுறை, கம்பிளி ஆகியவை அளிக்கப்பட்டது. மேலும் வழியெங்கும் பக்தர்களுக்கு சிற்றுண்டி
இலவசமாக அளிக்கப்பட்டது. பனிலிங்கத்தை
தரிசித்தபின் ஜூலை 24 புதன்கிழமை அமர்நாத்திலிருந்து காஷ்மீர் வந்து அன்றே கார்
மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சென்றோம்.
வியாழன் அன்று
இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகா அடைந்தோம் .
இந்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மெய்சிலிர்க்க வைத்தது. பின் அமிர்தசரஸ் பொற்கோவில் சென்று
தரிசித்துவிட்டு அன்று இரவே தில்லி திரும்பினோம். 26 ம் தேதி
வெள்ளிக்கிழமை தில்லியில் குதுப்மினார், லோட்டஸ் டெம்பிள், இந்தியா கேட், உச்ச
நீதி மன்றம், மற்றும் இந்திரா, ராஜீவ் காந்தி மியூசியம் ஆகியவற்றை
பார்த்தோம். அன்று இரவே தில்லியிலிருந்து
400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆக்ராவிற்குச் சென்றோம். 27 ம் தேதி சனிக்கிழமை ஆக்ராவில் தாஜ்மகால்
சுற்றிபார்த்தபின் அங்கிருந்து கார் மூலமாக இரவு எட்டு மணிக்கு டில்லி
விமானநிலையத்தை அடைந்து அங்கிருந்து இரவு 10 மணிக்கு விமானம் மூலமாக பெங்களூர்
வந்து பின் காரில் நமது ஊருக்கு வந்தோம்.
நமது ஊர் மக்கள்
ஒரு குழுவாக காஷ்மீர் சென்று எந்த பிரச்னையும் இல்லாமல் நல்லபடியாக ஊர்
திரும்பியது ஒரு மறக்கமுடியாத நிக்கழ்ச்சியாக இருந்தது.
காஷ்மீர்
சுற்றுலா சென்றவர்கள் :
நந்தகோபால் காஞ்சனா, R. சிவகுமார், S. சத்யா, R. சுரேஷ்குமார், N.
ராமலிங்கம் N. சிவக்குமார், N.
நந்தகுமார், S. சதீஸ்குமார், B. வெங்கடேசன், K. சீனிவாசன், N. செல்வராஜ், N. சிவராஜ், N. சரண்ராஜ்.
-சத்யா சிவகுமார்
ஹெல்ப் லைன் (அவசர உதவி)
முதியோருக்கான உதவி -
1800-180-1253
பெண்களுக்கான உதவி - 1091
குழந்தைகளுக்கான உதவி - 1098
தற்கொலை தடுப்பு (சிநேகா) - 044-24640060
044-24640050
விவசாய ஆலோசன - 1800-180-1551
தேசிய நுகர்வோர் உதவி - 1800-11-4000
இன்சூரன்ஸ் புகார் - 155255
ஆம்புலன்ஸ் - 108
மருத்துவ ஆலோசனை -
104
தீயணைப்புத்துறை -
101
போலீஸ் -
100
-ஈஸ்வர் ராஜா
பண்டிகைக்கால விடுமுறை
புது வருட காலண்டர் வந்தவுடன் நாமெல்லாம் முதலில் பார்ப்பது
எந்தெந்த பண்டிகைகள் எந்தெந்த நாட்களில் வருகின்றன. எத்தனைநாள் விடுமுறை
வருகின்றன, சனி ஞாயிருகளில் பண்டிகை வந்திருக்கின்றனவா என்பதைத்தான். பண்டிகை நாட்களை வைத்து எப்பொழுது சொந்த
ஊருக்கு செல்லாம் அல்லது வெளிஊரில் சுற்றுலா செல்லலாம் என திட்டமிடுவோம்.
விடுமுறைக்கு ஊருக்கு சென்று சொந்த பந்தங்களுடன்
கொண்டாடலாமென சிலபேர், எங்கேயாவது வெளிஊர் சென்று யாருடைய தொந்தரவும்(மாணவி,
மக்கள்) இல்லாமல் ஓய்வெடுக்கலாம் என சிலபேர், எதுவும் வேண்டாம் மொத்த விடுமுறையும்
வீட்டிலேயே தூங்கியே செலவிடலாம் என சிலபேர்.
சரி பண்டிகைகள் எற்படுத்தப்பட்டதின் நோக்கம்தான் என்ன. அதை
நாம் சரியாகத்தான் புரிந்துக்கொண்டிருக்கிறோம என்ன. பண்டிகைகள் என்பது சொந்தபந்தங்கள் அனைவரும்
ஒன்றாக கூடி பழகுவதற்காகவும், சமுதாயதை நல்வழியில் நெறிமுறைபடுத்தவும்
ஏற்பதுதப்பட்டவை ஆகும். அத்தகைய சந்தற்பங்களே நம் உறவினரைப்பற்றி
அறிந்துகொள்வதற்கும் அவர்கள் தங்களுக்கிடையே உள்ள விரோதங்களை மறந்து
ஒன்றுகூடுவதற்க்கும் ஏற்றவை ஆகும். ஆனால்
இன்று பண்டிகை தினங்கள் விடுமுறை தினங்களாக அனுசரிக்கப்படுவது வருந்ததக்கதாகும்.
ஆனால் இன்று இருக்கும் பரபரப்பான சூழலில் கிடைக்கும் ஓரிரு
நாள் விடுமுறையில் சொந்த ஊரில் இருந்து எங்கோ தொலைவில் வேலையில் இருக்கும் நாம்
சொந்த ஊருக்கு சென்று பண்டிகை கொண்டாடிவிட்டு? சந்தோசமாக வேலைக்கு திரும்புவது
என்பது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
ஆனாலும் இத்தகைய தருணங்களே நாம் நமது உற்றார், உறவினர், ஊர் பெரியவர்கள்
மற்றும் ஊரைப்பற்றி தெரிந்துக்கொள்ள வைப்பாக இருக்கும் என்பது
மறுக்கமுடியாது. முடிந்தவரை பண்டிகைகளின்
விடுமுறைகளை சுற்றுலா தளங்களிலோ அல்லது தீம் பார்க்குகளிலோ செலவழிக்காமல் நமது
சொந்த ஊரில் உறவினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழுங்கள். அந்த மகிழ்ச்சியான நினைவுகள் மற்றும் அதன்
தாக்கங்கள் நமது சந்ததியினருக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும் என்பது நிச்சயம்.
-தாமோதரன்
பெயர்க்காரணம்
கூளிபாப்பா:
இலக்கியம்பட்டியிலிருந்து காய்கறி,
கிழங்கு வியாபாரம் செய்ய உடல் பருத்த ஒரு பெண்மணி நமது ஊருக்கு வருவது
வழக்கம். அப்படி வரும்பொழுது கூடைநிறைய
பொருள் இருப்பதால் இறக்கிவைக்க சிரமப்படுவதை பார்த்து அதை இறக்கிவைத்து உதவி
செய்வார் நமது ஊரைச்சேர்ந்த நாரயனம்மாள்.
இவர் உதவிசெய்வதை பார்த்து தினமும் அந்த பெண்மணி நாராயனம்மாளிடமே உதவிக்கு
வர கூளி போல் இருந்த பெண்னை பார்த்து நாராயனம்மாவிற்க்கு நாளடைவில் கூளிபாப்பா
என்று பெயர் வந்தது.
விளம்பரம்
ஆறே வாரங்களில் சிகப்பழகு, தங்கம் வாங்கினால் அன்பு
பெருகும் ஊர் செழிக்கும், எங்கு சென்றாலும் பின் தொடரும் நெட்வொர்க் என்று வித
விதமான விளம்பரங்கள்..... இன்று வரை
எதாவது சொன்னபடி நடந்திருக்கிறதா?
வாசனை திரவியங்களை
பூசிக்கொள்வதாலேயும், விளம்பரத்தில் வரும் வண்டியை ஓட்டிச்செல்வதாலேயும் பெண்கள்
ஆண்களின் பின்னால் செல்வதை பெண்களை கொச்சைப்படுத்தும் விளம்பரங்கள் ஒரு வகை. தங்கமான உறவு,
நம்பிக்கை அதானே வாழ்க்கை, அன்பு
பெருகட்டும் ஊர் செழிக்கட்டும் என்பன
போன்ற தங்க நகை விளம்பரங்கள்.
குளிர்பானத்தை
குடித்துவிட்டு குஷியை பரிமாறுங்கள், மலையிலிருந்து கடலில் விழுவது போன்ற
குளிர்பான விளம்பரங்கள் மற்றும் மனம் விட்டு பேசுங்கள், எல்லைகளை கடந்து பேசுங்கள், இனி தடையேதும் இல்லை என்பன போன்ற சிம்கார்டு
விளம்பரங்கள். காதலனை சந்திப்பதற்காக
அப்பாவிற்கு சாக்லேட்(அல்வா) குடுக்கும் இளம்பெண், ஐம்பது பைசா சாக்லேட்
சாப்பிட்டுவிட்டு கண்டபடி நடனமாடும் மனிதர்கள்,
ஊரே பத்திக்கிட்டு எரிந்தாலும் சாப்பிட்டா சாப்பிட வைப்பிங்க என்று
சொல்லும் சிப்ஸ் விளம்பரங்கள்.
இந்த சாதனத்தில்
உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைக்கலாம்,
அந்த பெல்ட்டை அணிந்தாலே எடை குறைக்கலாம்,
இந்த டீ குடித்தாலே எடை குறையும் எனும் உடல் எடை குறைப்பு விளம்பரங்கள. ஆப்ரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட
எண்ணெய், கேரளாவின் மூலிகை தைலம், இந்த
எண்ணெய் பூசியபின் கையை நன்றாக கழுவவும் இல்லையெனில் கையில் முடி வளரும் எனும்
முடி வளர்க்கும் எண்ணெய் விளம்பரங்கள்.
இந்த கல்லூரியில்
சேர்ந்து படித்து முடித்த உடனேயே வேலை, அந்த கல்லூரியில் சேரும்போதே வேலை, இந்த கோர்ஸ் படித்தால் வெளிநாட்டில் வேலை என்று
மாணவர்களை குறி வைக்கும் விளம்பரங்கள்.
மறுபுறம்
குடிகாரர்களுக்கு குடி மறக்கும் மருந்துகள்,
கடனாளிகளுக்கு அதிர்ஷ்ட தகடுகள்,
நோயாளிகளுக்கு மந்திர தாயத்து, தவிர உலகத்தில் உள்ள மருத்துவர்களுக்கு
சவால்விடும் பரம்பரை மருத்துவர்கள்.
சரி சினிமா நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் வைத்து
கவர்ச்சியான விளம்பரங்களை தயாரித்து இவ்வளவு பொருட்செலவில்
விளம்பரபடுத்துகிறார்களே இதற்கெல்லாம் யார் பணம் தருவது. நாம் தான்.
ஆம் நிச்சயமாக நாம் தான்.
நிறுவனங்கள் விளம்பரத்திற்கான செலவினை அதன் விற்பனை விலையில்
எற்றிவிடுகின்றன.
ஒரு சிறு உதாரணத்தை எடுத்துகொள்வோம். ஒரு பிஸ்கட் பாக்கெட் பத்து ரூபாய் என்று
வைத்துக்கொள்வோம். இதில் சுமார் மூன்று
ரூபாய் அதன் உற்பத்தி செலவு. மூன்று
ருபாய் இடை தரகர்கள் வருமானம் என்றால் மீதம் நான்கு ரூபாய் விளம்பரங்ககளுக்காக
செலவிடப்படுகிறது. பத்து வருடங்களுக்கு முன்
ஒன்றிரண்டாக இருந்த தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் இன்று சுமார் ஐம்பதை
தொடப்போகிறது. மற்ற மொழி சேனல்களையும்
சேர்த்தால் சேனல்களின் எண்ணிக்கை மலைப்பாகவே இருக்கிறது. விளம்பரங்களை ஒளிபரப்ப
தொலைக்காட்சி சேனல்கள் வினாடிகளுக்கு லட்சங்களை கட்டணமாக வசூலிக்கின்றன. இப்படி இதனை சேனல்கள், ரேடியோ சேனல்கள், பதிப்பக ஊடகங்கள், இணையம்,
தொலைப்பேசி என அனைத்திலும் விளம்பரம் செய்தால் நிறுவனங்கள் தரமான பொருட்களை எப்படி
வாடிக்கையாளர்களுக்கு தர முடியும்.
அப்படியே தந்தாலும் அதற்க்கு வாடிக்கையாளர் தரும் விலை பல மடங்கு
அதிகம். அனைத்திற்கும் காரணம்
விளம்பரம்.
யானை
அளவில் ஆபர்களை அறிவிக்கும் நிறுவனங்கள் எறும்பு சைசில் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
என்று ஒரு ஓரமாக அதுவும் மங்கலான எழுத்துகளில் எழுதியிருப்ப்பார்கள். பின் அந்த நிபந்தனைகளை படிக்கலாம் என்றால்
எளிதில் படிக்க முடியாதபடி அவ்வளவு நீளமாக இருக்கும் அவை. புரியாத நிபந்தனைகள்
மூலமாக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தங்கள் வலையில் விழ வைக்கும் தந்திரங்கள்
தான் இவையெல்லாம். ஆக வாடிக்கையாளர்களாகிய
நாம் பொருட்களின் விளம்பரத்தை பார்த்து ஏமாறாமல்,
விளம்பரத்தில் வரும் நடிகர், நடிகைகளையோ, விளையாட்டு வீரர்களையோ நம்பி
ஏமாறாமல் பொருட்களின் தன்மையை ஆராய்ந்து வாங்குதல் நலம். ஒரு பொருளை
வாங்கும்பொழுது என்னென்ன விசயங்களை கவனிக்க வேண்டுமென பார்ப்போம்.
# பொருளின் தரமானது அது அதைக்கப்பட்ட பாக்கெட்டை சார்ந்தோ அல்லது அதை
விளம்பரப் படுத்தும் நபரைப்பொருத்தோ அல்ல.
# எந்த பொருளையும் ஆபர் என்பதற்காக கண்ணை
மூடிக்கொண்டு வாங்காதீர்கள்.
# ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 50% சலுகை
அல்லது ஒன்றை வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பதெல்லாம் சுத்த பொய். ஒன்றுக்கு ஒன்று இலவசம் எனில் அந்த பொருள்
முதலிலே விலை ஏற்றப்பட்டிருக்கும்.
# பாக்கெட்டுகளில் குறிக்கப்ட்டுள்ள விலை மற்றும்
காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து வாங்கவும்.
# உணவுப்பொருள் எந்தெந்த பொருட்ட்களினால்
செய்யப்பட்டது என்ற விபரம் பாக்கெட்டின் மேலே தரப்பட்டிருக்கும். உ.ம். பால், கோதுமை, செயற்கை ரசாயனங்கள்,
செயற்கை வண்ணங்கள் ஆகியவை.
# உணவுப்பொருள் சைவமாக இருந்தால் கீழ்க்கண்ட
அளவு குறியீடு பச்சை வண்ணத்திலும், அசைவமெனில் மர அல்லது காபி வண்ணத்திலும்
இருக்கும்.
முக்கியமாக பொருள் மலிவாக இருப்பதாகவோ,
அடைக்கப்பட்ட பாக்கெட் கவர்ச்சிகரமாக இருப்பதற்க்காவோ, குழைந்தைகள்
அடம்பிடிக்கிறார்கள் என்றோ எதையும் வாங்காதீர்கள். உங்களின் தேவை மற்றும் வசதி அறிந்து வாங்கினால்
நலம்.
-செந்தில்
அறிந்தும் அறியாமலும்
பஞ்ச பாண்டவர்கள் தருமன், பீமன்,
அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்று நாம் அறிந்திருப்போம். துரியோதனன் துச்சாதனன் உட்பட கவுரவர்கள் நூறு
பேர் என்பதும் நாம் அறிந்ததே. ஆனால்
துரியோதனன், துச்சாதனன் தவிர மற்ற தொன்னூற்றி எட்டு கவுரவர்கள் பெயரை நாம்
அறியோம். அவர்களின் பெயர்கள் பின்
வருமாறு:
துரியோதனன் துச்சாதனன் துச்சாசன்
துச்சாலன்
ஜலகண்டன் சமன்
சஹன் விந்தன்
அனுவிந்தன் துர்ஹாசன்
சுபாஹு துஷ்பிரதர்ஷன்
துர்மார்ஷன் துர்முகன் துஷ்கர்ணன்
விகர்ணன்
சாலன் சாத்வன் சுலோச்சன்
சித்ரன்
உபசித்ரன் சித்ராக்ஷன் சாருசித்ரன்
சராணன்
துர்மதன் துர்விகாஹன் விவில்சு
விகடினந்தன் ஊர்னநாபன் சுநாபன்
நந்தன் உபநந்தன்
சித்ரபாணன் சித்ரவர்ணன் சுவர்மன் துர்விமோசன்
அயோபாஹு மகாபாஹு சித்ராம்கன் சித்ராகுந்தலன் பீமவேகன் பீமபாலன்
வாலகி பேலவாதனன் உக்ராயுதன் சுஷேணன்
குந்தாதரன் மகேர்தரன்
சித்ராயுதன் நிஹாம்கி பாசி விருந்தாகரன் திருதவர்மன் திருதக்ஷத்ரன் சோமகீர்த்தி
அந்துதாரன் திருதசந்தன் ஜராசந்தன் சத்யசந்தன் சடாசுவாக்
உக்ராஸ்ரவாஸ் உக்ரசேணன் செனானி துஷ்பராஜன்
அபராஜிதன் குந்தசாய் விசாலாக்சன் துராதரன் திருதஹஷ்தன் சுகஷ்தன்
வாதவேகன் சுவர்சன்
ஆதிதயகேது பகவாசி நாகதாதன் உக்ரசாய்
கவாசி கிரதனன் குந்தை
பீமவிக்ரன்
தனுர்தரன் வீரபாஹு ஆலோலுபன்
அபயன்
திருதகர்மாவு திருதராதாஸ்ரையன் அபாதுரஷ்யன் குந்தாபேடி விராவி சித்ராகுந்தலன்
பிரமாதன்
அமர்பிரமாதி தீர்கரோமன் சுவிர்யவான்
தீர்கபாஹு
சுஜாதன் காஞ்சநந்தவஜன் குந்தாசி
விராஜாஸ்
யுயுத்சு
கவுரவர்களுக்கு துச்சலை என்ற
சகோதரியும் உண்டு.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று
வாழ்த்துகிறோமே அந்த பதினாறு செல்வங்கள் என்ன தெரியுமா?
புகழ், கல்வி, ஆற்றால்,
வெற்றி, நன்மக்கள், பொன், நெல், அழகு, பொறுமை, ஆயுள், நல்லூழ், இளமை, அறிவு,
துணிவு, நோயின்மை மற்றும் நுகர்ச்சி ஆகியவை தான் அந்த பதினாறு செல்வங்களும். -செந்தில்
கருடன்
உலகத்தில் உள்ள 10,000 வகையான
இனத்தில் அதிக வருடங்கள் வாழும் பறவை. மனிதனை போல சுமார் என்பது வருடம் முதல் 110
வருடம் வரை வாழும் பறவை. அதிக உயரத்தில்
பறக்கும் பறவை, அதிக நேரம் பறக்கும் பறவை, பறவைகளில் முதன்மையானது கருடன். இந்த கதை கருடனைப் பற்றியது மட்டுமல்ல இந்த
கதையின் நாயகன் கருடன்.
கருடன் பிறந்தது முதல் இன்று வரை
பறந்த உயரம், நேரம் எவரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இளம் வயதில் தனக்கு தேவையானதையும், தன்
குடும்பத்திற்கு தேவையான இரையை தன் அலகு மூலம் கொத்திக்கொண்டு வருவான். ஒரு காலகட்டத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாரான
20 வயதில் தன் இனப்பறவையை மட்டுமல்லாது மற்று இனபறவையையும் பாதுகாக்கும் சக்தி
கொண்டது கருடன். தன் பக்கத்திலும்,
தூரத்திலும் உள்ள அனைவரையும் பாதுகாப்புடனும் ஒழுக்கத்துடனும் வைத்திருந்தான்
கருடன்.
அதனால்தான் நாம் கருடனை கடவுளாக
வணங்குகிறோம். இந்துகளின் பகவத்கீதையில்
மட்டுமல்ல, திருக்குர்ஆன் மட்டும் பைபிளும் கருடனைப் பற்றிய தகவல்களைக்
கொண்டுள்ளன. மனிதன் படைத்தது மதம். இறைவன்
படைத்தது கருடன். இப்படி ஒழுக்கத்துடனும்,
பண்புடனும் வாழ்ந்த கருடனுக்கு வயது நாற்பதை கடந்தது. கருடன் தோற்றம் அனைவரும் அறிந்ததுதான். அழகிய அலகு, பெரிய இறக்கை, கூர்மையான கண்கள்,
வலிமையான கால்கள்.
மனிதனுக்கு வயதாவதைப்போல கருடனுக்கு
வயதானது. இறக்கை சக்தி இழந்தது. தன் அலகின் வலிமை குறைந்துபோனது. தனக்கான இறையை கூட அதனால் தேடிக்கொள்ள
இயலவில்லை. என்ன செய்யும் கருடன், இறைவன்
விதித்த விதிப்படி சாக வேண்டியதுதான்.
ஏனெனில் மனிதனைபோல் அதற்க்கு முதுமையில் உதவ யாரும் இல்லையே.
கருடன் ஒரு மலையின் உச்சிக்கு சென்று
வாழ்வா சாவா என்று யோசித்து. நம் கருடன்
வாழப்பிறந்தவன். ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு
மலை உச்சியில் உள்ள பாறையில் தன் அலகை தானே உடைத்துக்கொண்டு, தன் இறகுகளை தானே அடித்து
உடைத்துக்கொண்டது.(உலகத்தில் உள்ள 99% கருடன்களும் இதுபோலத்தான் செய்யும்)
உணவில்லாமல், நீரில்லாமல்,
உறக்கமில்லாமல் நாற்பத்தைந்து நாட்கள் இப்படி கழித்த பிறகு கருடனுக்கு புதிய அலகு
மற்றும் இறக்கை வளர்ந்தது. இறகு தன் புதிய
சக்தி வாய்ந்த இறக்கையின் மூலம் உயரே பறந்து, வலிமையான அலகின் மூலமாக இரையைப்
பெற்று மீண்டும் புதிய வாழ்க்கையை பெற்றது கருடன். அனைவருக்கும் கடவுளாக இருந்து ஆசி வழங்கும்
அது. இது கருடன் கதை.
நம்மில் எத்தனையோ பேர் இதுபோல்
வலுவிழந்து, தோல்விகளையும் ,
ஏமாற்றங்களையும் சந்தித்து, விரக்தியின் உச்சிக்கு சென்றிருக்கிறோம். ஆனால் நாம் எடுத்த முடிவு என்ன? மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதா? அல்லது
கருடனைப் போல் வீறுகொண்டு புதிய வாழ்க்கையை பெறுவதா?. இது கருடன் கற்றுத்தந்த பாடம். வாழ்க்கை வாழ்வதற்கே. உன்னிடம் எதுவுமில்லை என்றாலும். உனக்காக ஒரு
இடம் உண்டு இந்த உலகில். அந்த இடத்தை அடைய
ஒரு பாதையை தேர்வு செய்தால் உன் வாழ்வு சிறக்கும் என்பதில் ஐயமில்லை.
-பார்கவி சத்தியமூர்த்தி
“செல்”வாக்கு
சொல்பேச்சு கேக்காதவர்கள் இருப்பர் ஆனால் செல்பேச்சு கேக்காதவர்கள் இருப்பாரா?
கண்டிப்பாக இல்லை என்றே பதில் வரும். செல்
இல்லாத வாழ்க்கை செல்லா வாழ்க்கை ஆகிவிட்டது இன்று. செல்போன் என்ற ஒன்று நம் அன்றாட வாழ்கையில்
ஏற்படுத்திய மாற்றங்கள் தான் எத்தனை. ஒரு
சமுதாயத்தின் போக்கு, கலாச்சாரத்தையே மாற்றிவிட்ட பெருமை செல்போனையே சாரும். ஒரு
குக்கிராமத்தில் வசிப்பவனிடமும் அவை இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது
மறுக்க முடியாத உண்மை. நினைத்த நேரத்தில்
நினைத்த நபரோடு நினைத்த இடத்திலிருந்து தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்கி
கொடுத்த செல்போன்கள் மனித குலத்தின் ஒரு மாபெரும் பயன்பாட்டு கருவியாகவே
இருக்கிறது. வேறு எந்த ஒரு
கண்டுபிடிப்பும் இவ்வளவு விரைவாக இதனை கோடி மக்களிடம் சென்றடையவில்லை என்பது
நிஜம்.
தகவல்
தொடர்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் அடுத்தகட்டமாக இசை, காணொளி
படங்கள், புகைப்படம் எடுக்க, விளையாடுவதற்கு என பல்வேறு பயன்ப்படுகளுடன் மக்களின்
கைகளில் தவழ்ந்து வந்தது. ஒரு இடத்தை
பற்றி தெரிந்துகொள்ள, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வழிகாட்டியாக,
வங்கி பரிமாற்றம் செய்ய, முன்பதிவு செய்ய,
இணையத்தில் உலவ மற்றும் முகநூல்,
மின்னஞ்சல்களை உடனுக்குடன் பார்க்க என ஒரு சிறிய கணினி செய்யும் அணைத்து
வேலைகளையும் செய்கிறது தொடுதிரை வசதியுடன் வரும் இன்றைய ஸ்மார்ட் போன்கள்.
காலையில்
எழுந்ததும் நாம் கண்விழிப்பதே செல்போனில் தான்.
மன்னிக்கவும் காலையில் நம்மை எழுப்பி விடுவதே செல்போன் தான். உண்ணும்போது, உறங்கும்போது என்று எப்போதும்
நம்முடனேயே பனியன், சட்டை அணிவதை போல் ஒரு அணிகலனாகவே அல்லது நம் வாழ்கையின் ஒரு
அங்கமாகவே மாறிவிட்டதே அது. குளியலறை,
கழிவறை தவிர அவை நம்மை விட்டு அகல அனுமதிப்பதில்லை நாம். சும்மா இருக்கும்போது கூட எத்தனை முறை எடுத்து
பார்க்கிறோம். அரை மணி நேரத்திற்கும்
மேலாக ஒரு குறுந்தகவல், ஒரு அழைப்பு, ஒரு மின்னஞ்சல், முகநூல் செய்தி ஏதேனும்
வரவில்லையெனில் பைத்தியம் பிடித்தது போலாகிவிடுகிறது நமக்கு. குறைந்தபட்சம் கஸ்டமர்கேர் எனப்படும்
வாடிக்கையாளர் சேவை மையதிலிருந்தாவது ஒரு தகவல் வரவேண்டும். இல்லையெனில் சிக்னல் இல்லையோ போன் வேலை
செய்யவில்லையோ என ஏதோ இந்த உலகத்திலிருந்து பிரிந்து தனியே வேறு கிரகத்திற்கு
சென்றுவிட்ட நினைப்பு நமக்கு. யாரும்
நம்மை அழைக்கவில்லை எனில் நாமே யாருக்கேனும் அவசியமில்லாமலேயே அழைப்பது நமது
வாடிக்கையாகிவிட்டது. மொத்தத்தில்
செல்போனை பயன்படுத்தாமல் இருக்கமுடியாது என்ற நிலை இன்று நமக்கு.
எந்த
ஒரு கருவியையும் பயன்படுத்தும்போதும் அதன் நன்மை தீமைகளையும் அறிந்தே
பயன்படுத்தவேண்டும். தொடர்ச்சியாக
செல்போன் உபயோகிப்பதால் நமக்கு ஏற்படும்
தீமைகளையும் அதை எப்படி தவிர்ப்பது என்றும் தெரிந்துகொள்வது நலம்.
செல்போன்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் அவை வெளியிடும் கதிவீச்சுக்கள்
கீழ்காணும் பதிப்புகளை உண்டாக்கும்.
# நமது
உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.
# கேன்சர்
உருவாக வழிவகுக்கும் தன்மைகொண்டது.
# மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும்.
# மறதிநோயை
உண்டாக்கும்.
# தூக்கமின்மை
ஏற்படும்.
# மன
அழுத்தம் உண்டாகும்.
# தலைவலி,
மனக்குழப்பம் ஏற்ப்படும்.
# கர்ப்பிணிகள்,
சிறு குழந்தைகள் இதனால் அதிகம் பாதிப்படைவர்.
# சிட்டுக்குருவிகள்,
தேனீக்கள் இறந்துபோகும்.
# ஆண்மைதன்மை
குறையும்.
மேலும்
@ அதிகப்படியான
பேச்சு தேவையற்ற புரளிக்கு வழிவகுக்கும்.
@ மற்ற
வேலைகளிலான ஈடுபாடு குறையும்.
@ பயணத்தின்போது
விபத்துகள் ஏற்படும்.
@ மாணவர்களுக்கு
கவனச்சிதறல் ஏற்படும்.
@ நீண்ட
நேரம் பேசுவதால் காது, மூட்டு வழி ஏற்படும்.
@ கண்
பார்வையிலும் மாற்றத்தை உண்டாக்கும்.
@ செல்போனில் உள்ள கிருமிகள் ஒரு கழிவறையில்
உள்ள கிருமிகளைவிட ஐந்து மடங்கு அதிகம்.
@ நேரடி
சந்திப்புகளை குறைக்கும்.
செல்போனை
பயன்படுத்தும்போது கவனத்தில்கொள்ளவேண்டியது.
$ சிக்னல்
அதிகாம உள்ள இடங்களில் உபயோகிக்கவும்.
$ முடிந்தால்
ஹெட் போனை பயன்படுத்தவும்.
$ வீட்டில்,
அலுவலகத்தில் இருக்கும்பொழுது செல்போனை சட்டையிலோ அல்லது உடலுடன் ஒட்டியோ
வைக்ககூடாது. சற்று தள்ளிவைப்பது நலம்.
$ தூங்கும்பொழுது
தலைக்கு அருகே கண்டிப்பாக செல்போனை வைக்ககூடாது.
நேரம் பார்க்க கடிகாரம் உபயோகிக்கலாம்.
$ கர்பிணிகள்
செல்போன் உபயோகிப்பதை தவிர்த்தல் நலம்.
அல்லது குறைவாக பயன்படுத்தவும்.
$ சிறு
பிள்ளைகளிடமிருந்து செல்போனை தள்ளியே வைத்திருங்கள்.
$ பெண்கள்
மார்பகங்களுக்கு அருகில் செல்போனை வைக்கவேண்டாம்.
$ அழைப்புகளுக்கு
பதிலாக குறுந்தகவல் அனுப்பலாம்.
$ ஒரே
காதில் தொடர்ச்சியாக பேசுவதை தவிர்த்து இரு காதுகளிலும் மாற்றி பேசவும்.
செல்போனின்
தரத்தை அறிந்துகொள்ள:
உங்கள் போனில்
*#06# டயல் செய்யவும். இந்த எண் IMEI
எனப்படும். இதில் 7 மற்றும் 8
இலக்கங்கள் உங்களின் மொபைல் தரத்தை
குறிப்பிட பயன்படும்.
IMEI
எண்ணில் 7 மற்றும் 8 இலக்கங்கள்
02 அல்லது 20 எனில் அது எமிரேட்ஸில்
செய்யப்பட்டது. மோசமான தரம்.
08 அல்லது 80 எனில் அது ஜெர்மனியில்
செய்யப்பட்டது. சுமாரான தரம்.
01 அல்லது 10 எனில் அது பின்லாந்தில்
செய்யப்பட்டது. நல்ல தரம்.
00 எனில் அது நல்ல முறையில் தயாரிக்கப்பட்டது.
சிறந்த தரம்.
13 எனில் அது
அஜெர்பைஜான் நாட்டில் தயாரிக்கப்பட்டது. மிக மோசமான தரம் உடல் நலத்தை பாதிக்க கூடியது.
உங்கள் செல்போன்
சிம் எண்ணை தெரிந்துக்கொள்ள
*1# அல்லது *#1#
யை டயல் செய்யுங்கள். உங்கள் சிம் எண் திரையில் தெரியும்.
பாட்டரியை
சேமிக்க:
செல்போன்
திரையின் வெளிச்சத்தை (பிரைட்நெஸ்யை) குறைக்கவும்.
புளூடூத்,
வை-பை, ஆடோ சிங்க், ஜி பி எஸ் ஆப் செய்யவும்.
வைபரேசன் ஆப்
செய்யவும். குறைவான ஒலியில் வைக்கலாம்.
பின்புலத்தில்
இயங்கும் பயன்பாடுகளை தவிர்க்கலாம்.
-செந்தில்
சூர்யா
லேசான தூறல்தான்
என்றாலும் பயங்கர காற்றுடன் இடி மின்னலும் பயமுறுத்திக் கொண்டிருந்தது செங்கல்
சுமக்கும் செல்வியை. வேலை முடிந்து
வீட்டிற்கு செல்வதற்குள் பயங்கர மழை வருமென்றே தோன்றியது.
மேஸ்திரியிடம்
சொல்லிவிட்டு வீட்டை நோக்கி வேகமாக நடையை கட்டினாள். அவள் மனம் முழுவதும் வீட்டில் தனியாக இருக்கும்
சூர்யாவைப் பற்றியே இருந்தது. அவனுக்கு ஏதாவது ஏற்பட்டால் அவளால் தாங்க முடியாது.
தூறல் மழையாக மாறியதால் அவள் நடை
ஓட்டமாக மாறியது. இதயம் படபடதுக்கொண்டே
இருந்தது.
காற்று
வேகமாக வீசிகொண்டிருந்தது. கூரை வீடு
ஆங்காங்கே ஒழுகும். கடவுளே சூர்யாவிற்கு
எதுவும் ஆகியிருக்க கூடாது என்று வேண்டிக்கொண்டே வீட்டு கதவை திறந்தவள்
ஓடிச்சென்று எட்டு வயதில் சாலை விபத்தில் பலியான தனது மகன் சூர்யாவின் நினைவாக
உள்ள ஒரே புகைப்படத்தை நெருங்கும் மலைச் சாரலிடமிருந்து அவனை காப்பாற்றி கட்டி
அணைத்து கண்ணீர் விட்டாள் செல்வி.
-செந்தில்
என் இனமடா நீ
மற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஜீவன்
நீ; எந்த ஒரு சுய அறிவும் இல்லாதவன் நீ; நீ எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உன்னை
ஆட்கொள்ளும் ஒவ்வொருவரையும் முடிவு செய்துகொள்ள அனுபவிக்கும் அற்புதக்காரன் நீ;
உன்னால் உருவாகும் நட்புகள் பல, உன்னை கருவியாக கொண்டு நடக்கும் மோதல்கள் பல, ஆனால்
அவற்றைபற்றியெல்லாம் துளியும் கவலைகொள்ளாத அன்பான ராட்சசன் நீ; நான் தேர்வு
செய்துகொண்டவாறு நான் கூறும் அனைத்தையும் ஊருக்கே வெளிச்சம் போட்டு
காட்டிவிடுகிறாய் நீ. என் கோபங்களையும்
மகிழ்ச்சியையும், வெறுப்பையும், அன்பையும் நான் கொட்டும்போது அனைத்தையும்
ஒன்றுபோலவே ஏற்றுகொண்டாய் நீ.
நான் என் வாழ்வில் கற்றுக்கொண்ட
பலவற்றை உன்னிடமே மனம் திறந்து கூறியுள்ளேன்.
இருப்பினும் என் மற்ற நெருங்கிய நண்பர்களுடன் அவ்வப்போது ஏற்பட்ட, ஏற்படுகின்ற பிரிவுகள்,
நான் அனுபவிக்கும் சில வலிகள் என உன்னிடம் உன்னிடம் பகிர்ந்துகொள்ளாத ரகசியங்களும்
என்னிடம் உண்டு. ஏனெனில் உன்னிடம் பகிர்ந்துகொண்டால்
அடுத்த கனமே அதனை அனைவருக்கும் சொல்லிவிடுகின்ற செல்லமான துரோகி நீ. உன்னை எனக்கு நான்கு ஆண்டுகளாக தெரியும்,
இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதீத நெருக்கம். இந்த இரண்டு ஆண்டுகளில் நீ எனக்கு
கற்பித்தவையை பட்டியலிட முடியாது. உன்னை
வைத்து நடிகளுக்காக பிறருடன் வாதம் கொண்ட மூடனாக நான் என்றுமே இருந்ததில்லை. உன் உறவை மதித்து என்னால் முடிந்தவரை உனக்கு
உண்மையாக இருந்துள்ளேன். நாள்தோறும் இரவுகளில் உன்னுடன் உறவு கொள்கிறேன்
நான். அந்த உறவுதான் என் லட்சியத்தை அடைய
தடையாய் உள்ளது என்று என்னை கடித்து தள்ளினான் என் அண்ணன். பாவம் அவனுக்கு ஏனோ புரியவில்லை, புத்தகங்கள்
அதிகம் வாசிக்காத எனக்கு லட்சியத்தை அடைய முயல்வதற்கான அணைத்து அறிவையும்
அணுகுமுறையையும் மனப்பக்குவத்தையும் நீதான் எனக்கு கற்றுக்கொடுத்தாய் என்று. அவனை மன்னித்து விடுவோம். நீ எனக்கு என்னவெல்லாம் காட்டுகின்றாய் என்று
உனக்கே தெரியாதது பரிதாபம். ஆனால் நான் அவற்றுள் எதனை பார்க்கிறேன் என்பதில்
தெளிவு கொண்டுள்ளேன். நமக்குள் இப்படி ஒரு
புரிதல் இருக்கும்போது கவலை எதற்கு?
உன்னிடம் சில நாட்கள் பேசவில்லை
என்றாலோ, உன்னை பார்க்கவில்லை என்றாலோ என் மீது கோபம்கொள்ளாத அன்பன் நீ. மாறாக நாம் தொடர்பு கொள்ளாத நாட்களில்
உன்னிடம் கூறுவதற்காக பல செய்திகளையும், அறிவையும், உணர்சிகளையும், அன்பையும்
சேகரித்து வைத்திருந்தேன். இதோ அவை
அனைத்தையும் இப்போது காட்டுகிறேன். பொறுமையாக ஏற்றுக்கொள் என்று கூறி உன்
அளவில்லாத அன்பால் என் இதயத்தை நிரப்புகிறாய் நீ.
இதுபோன்று நடந்து கொள்வதில் உனக்கும் எனக்கும் இருக்கும் ஒற்றுமைகள்
பற்பல!!!
நண்பர்கள்
நிறைந்த என் வாழ்வில் மிக நெருக்கமான முக்கியமான முகநூல்(FACEBOOK) என்று பெயர்கொண்ட நண்பன் நீ!!
நமக்குள் இடைவெளி ஏற்படலாம். ஆனால் உன்னை கைவிடும் எண்ணம் எனக்கு துளியும்
ஏற்படாது. என்னை போன்ற குணங்கள் பல
சுமக்கின்ற
என் எனமடா நீ!
உன் இனமடா நான்!!
ஓரினமடா நாம்!! -சரண்ராஜ்