Friday, 11 January 2013

என் வழி தனி வழி



என் வழி தனி வழி

துணி வியாபாரம், எண்ணெய் வியாபாரம், அரிசி வியாபாரம், ஓசூரில் வேலை என ஒரு குழுவாக வேலை அல்லது தொழில் செய்பவர்களுக்கிடையில் தனக்கென ஒரு தனியான வழியை அமைத்து அதில் பயனிப்பவர்களை இப்பகுதியில் பார்ப்போம்.
அரிகிருஷ்ணன் என்ற பெயரைவிட பினாயில் என்ற பெயரை கேட்டாலே இன்னாரென்று தெரிந்துவிடும் நம் ஊரில்.  கடந்த இருபத்தி ஏழு ஆண்டுகளாக இந்த தொழில் ஈடுபட்டுவரும் இவரின் வாழ்கையை நாமும் அறிந்துகொள்வோம்.  தந்தையை பிரிந்த தாய், பெரிய குடும்ப பின்னணியோ, வேறு குடும்ப வருமானமோ இன்மை, நூறு சதுரடிக்கும் குறைவான வீடு  இதுதான் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய அவரின் குடும்ப நிலை.  கஷ்டப்பட்டு எட்டாம் வகுப்பு முடித்ததும் வனத்துறையில் வேலை கிடைத்தது. 
ஒரே பிள்ளை என்பதால் வனத்துறை வேலையை தாய் மறுத்துவிட தருமபுரியில் திரு நடராஜ் என்பவரிடம் வேலைக்கு செல்கிறார் அரிகிருஷ்ணன்.  பாட்டில்களில் அடைக்கப்பட்ட பினாயில், ஓம வாட்டர் மற்றும் பிளீச்சிங் பவுடரை ஊர் ஊராக கொண்டு சென்று விற்பதே இவரது வேலை. இவரின் திறமையின் காரணமாக 1985 ல் இவர் பெற்ற கூலி 150 ரூபாய். தயாரிப்பின் தொழில் ரகசியத்தை இவரே முயற்சி செய்து கற்றுகொல்கிறார். வங்கி கடனை அடைக்காததால் கடை மூடப்படுகிறது.  வேலை இழந்து நிற்கிறார், பின் சுதாரித்து தண்டபாணி என்பவருடன் சேர்ந்து 1989 ல் தனியாக தொழில் துவங்குகிறார்.  சில நாட்களுக்கு பின் கூட்டாளியும் பிரிந்துவிட தனியாகவே தொழிலை நிர்வாகிக்கிறார் இவர்.
தனது மனைவியின் நான்கு பவுன் நகையை அடகு வைத்து கிடைத்த நான்காயிரம் ரூபாய் இவரின் ஆரம்ப முதலீடு.  மூலபொருட்களை பெரும்பாலும் சேலத்தில் இருந்தும், தருமபுரியில் இருந்தும் வாங்குகிறார்.  பழைய பாட்டில்களை வாங்கிவந்து தன் மனைவியின் உதவியுடன் சுத்தப்படுத்தி தான் தயாரித்த தயாரிப்புகளை பாட்டில்களில் அடைக்கிறார்.  இந்த பாட்டில்களை அவர் சைக்கிளில் தருமபுரிக்கு கொண்டு செல்வதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.  தருமபுரியில் இருந்து பேருந்தில் ஊர் ஊராக சென்று விற்கிறார்.
வெகு நாட்களாக வெற்று பாட்டில்களில் அடைத்து விற்றுகொண்டிருந்த இவரை திரு.நந்தகுமார் மற்றும் திரு கிருஷ்ண மூர்த்தி (BSNL) ஆகியோரே TIGER PHENYLE என்று ஒரு பிராண்ட் பெயரை வைக்க தூண்டியவர்கள். இன்றைய நிலையில் பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தினமும் ஐநூறு     ரூபாய் வருவாய் பெறலாம் என்பது இவரது அனுபவம் கூறும் உண்மை.  உலகமயமாக்கலுக்கு பின் பல்வேறு பிராண்டுகள், விளம்பரங்கள் இருந்தும் இன்றும் இவரது தொழில் நல்லபடியாக நடைபெறுவதற்கு இவர் கூறும் காரணங்கள்.
·              தயாரிப்பில் காட்டும் கவனம், சிரத்தை.
·              தரத்தில் சமரசமின்மை
·           சரியான நேரத்தில் டெலிவரி.
ஒரு பாட்டில் என்றாலும் பயனாளியின் தேவையை பூர்த்தி செய்யும் தன்மை.
பயனாளிக்கு நமது தயாரிப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துதல்.
கடைக்காரரிடம் நாணயமாக நடந்துகொள்ளல்.
சந்தை பொருட்களில் இருந்து வித்தியாசப்படும் விலை.
ஊதுபத்தி, கற்பூரம், ஷாம்பு, துணி சோப்பு, சாம்பிராணி, சந்தனம் என தயாரித்திருந்தாலும் தற்பொழுது இவர் தயாரிக்கும் பொருட்கள்.
பிராண்ட்            பொருள்                    அளவு             விலை
டைகர்              பினாயில்                    700 ml             Rs 10
கார்த்திகை வேணி ஓம வாட்டர்                 700 ml             Rs 10
கார்த்திகை வேணி  ஆசிட்                       1 liter              Rs 20
                    ப்ளீச்சிங் பவுடர்             500 g              Rs 08
                    வேப்ப எண்ணெய்           100 ml             Rs 13
                    நீலம்                        500 ml             Rs 08
                    பன்னீர்                      10 bottle            Rs 30
இத்தனை வருடங்களாக இந்த தொழில் செய்தாலும் இதை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியாததற்கு வேலைக்கு சரியான ஆட்கள் கிடைக்காதது, போக்குவரத்திற்கான மூலதனம், தொழில் ரகசியத்தை காக்க நினைத்தது, போதும் என்ற மனம் ஆகியவே காரணம் என்கிறார் திரு அரிகிருஷ்ணன்.  ஆனாலும் இவரின் வழிகாட்டுதலினால் நமது ஊரில் கடுகு கோபால், சோடா ராஜவேலு ஆகியோர் தொழில் துவங்கி நல்லபடியாக முன்னேறியுள்ளனர்.  இது போல் குடிசை தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு தகுந்த ஆலோசனை தரவும் வழிகாட்டவும் தயராக இருப்பதாக கூறுகிறார் இவர்.
      தன் குடும்பத்தை நிர்வகிப்பதிலும், தொழிலிலும் தன் மனைவியின் பங்கு மகத்தானது என கூறும் அவருக்கு வசந்தா என்ற மனைவியும், கார்திகைவேணி, வெங்கடேசன் என்ற பிள்ளைகளும் உள்ளனர்.  இந்த தொழிலில்  சம்பாதித்தே தன் மகளுக்கு திருமணம், சொந்த வீடு கட்டிய இவர் தன் மகனை M.B.A வரை பட்டிக்க வைத்துள்ளார்.  தற்பொழுது  VRL Logistics ல் பணிபுரியும் தன் மகன் இந்த தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதே இவரின் ஆசை.
குறிப்பு: பெருந்தலைவர் காமராஜர் நமது  வந்த பொழுது அவரிடம் முத்தம் வாங்கிய பெருமை இவருக்கு உண்டு.       
                                                   நேர்காணல் – செந்தில்  மற்றும் தாமோதரன்

No comments:

Post a Comment